Tuesday, July 7, 2009

கண்ணீர் கலந்த கவிதை

இதன் முந்தைய கவிதையைப் படித்த பிறகே இந்தக் கவிதையைப் படிக்கவும்.

அன்று சுனாமி வந்த பொழுது கடலுக்கு ஆதரவாகப் பேசியவன், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பாடாமல் இல்லை. உண்மையில் இதுதான் முதலில் எழுதிய கவிதை. அதன் பிறகு தான் கடலுக்காக எழுதினேன்.

கரைமீது விளையாடி கடலோடு
        கவிபாடி களித்திருந்தோம் இன்றந்தக்
கரைதன்னை மறைத்தெங்கும் நீர்நிறைந்து
        நீர்மறைத்து மிதப்பதெங்கும் பிணங்களாக
நிறைகின்ற நீரொடுகண் ணீர்நிறைந்தே
        அழுகுரலின் ஒலியுமிங்கு நிறைகிறது
குறையின்றிப் பிழைத்துவிட்டோம் என்றெண்ணி
        ஒருகூட்டம் நிம்மதியில் சிரிக்கிறது

சிறுக சிறுக சேர்த்து வைத்த
        செல்வ மெல்லாம்
பெருகி வந்த வெள்ளத் தோடு
        போன தாலே
இருந்த இடத்தை விட்டுப் போகவும்
        வழியவர்க் கில்லை
இருக்கும் இடத்தில் வாழ இனியவர்க்
        குணவும் இல்லை

பெற்ற பிள்ளை கடலில் சாகும்
        கொடுமை தன்னைக் கண்டார்
சுற்றம் என்று சொல்லிக் கொள்ள
        இனியவர்க் கெவரும் உண்டோ?
நிற்கவும் இடமிலை பிணத்தின் நாற்றம்
        எங்கும் வீச; அதிலும்
பெற்ற தாயின் உடலைத் தேடும்
        மரண வேதனை கொண்டார்

நினைத்தாலும் உள்ளம் கொதிக்கிறது - கடல்
நீரெங்கும் பிணங்கள் மிதக்கிறது
பிணக்காடாய் ஊரே ஆனது - உடலை
வாங்கவும் ஆளின்றிப் போனது

எவரும் எதிர்பாரா தருணம் - நில
நடுக்கத்தால் எத்தனை மரணம் - மகிழ்ச்சி
மீண்டும் என்று மலரும்? - அந்த
நாளும் விரைவில் வரணும்


-இராஜகுரு
(02 / ஜனவரி / 2005)

(குறிப்பு: "தருணம்" என்பது தமிழ்ச் சொல் அல்ல. 'அதை மாற்றினால் அங்கு அமைந்த ஓசை மாறக்கூடும். அதனால் அதை மாற்ற வேண்டாம்' என்ற நண்பர் ஒருவரின் கருத்துக்காக அதை மாற்றவில்லை)