Showing posts with label சுனாமி கவிதை. Show all posts
Showing posts with label சுனாமி கவிதை. Show all posts

Tuesday, July 7, 2009

கண்ணீர் கலந்த கவிதை

இதன் முந்தைய கவிதையைப் படித்த பிறகே இந்தக் கவிதையைப் படிக்கவும்.

அன்று சுனாமி வந்த பொழுது கடலுக்கு ஆதரவாகப் பேசியவன், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பாடாமல் இல்லை. உண்மையில் இதுதான் முதலில் எழுதிய கவிதை. அதன் பிறகு தான் கடலுக்காக எழுதினேன்.

கரைமீது விளையாடி கடலோடு
        கவிபாடி களித்திருந்தோம் இன்றந்தக்
கரைதன்னை மறைத்தெங்கும் நீர்நிறைந்து
        நீர்மறைத்து மிதப்பதெங்கும் பிணங்களாக
நிறைகின்ற நீரொடுகண் ணீர்நிறைந்தே
        அழுகுரலின் ஒலியுமிங்கு நிறைகிறது
குறையின்றிப் பிழைத்துவிட்டோம் என்றெண்ணி
        ஒருகூட்டம் நிம்மதியில் சிரிக்கிறது

சிறுக சிறுக சேர்த்து வைத்த
        செல்வ மெல்லாம்
பெருகி வந்த வெள்ளத் தோடு
        போன தாலே
இருந்த இடத்தை விட்டுப் போகவும்
        வழியவர்க் கில்லை
இருக்கும் இடத்தில் வாழ இனியவர்க்
        குணவும் இல்லை

பெற்ற பிள்ளை கடலில் சாகும்
        கொடுமை தன்னைக் கண்டார்
சுற்றம் என்று சொல்லிக் கொள்ள
        இனியவர்க் கெவரும் உண்டோ?
நிற்கவும் இடமிலை பிணத்தின் நாற்றம்
        எங்கும் வீச; அதிலும்
பெற்ற தாயின் உடலைத் தேடும்
        மரண வேதனை கொண்டார்

நினைத்தாலும் உள்ளம் கொதிக்கிறது - கடல்
நீரெங்கும் பிணங்கள் மிதக்கிறது
பிணக்காடாய் ஊரே ஆனது - உடலை
வாங்கவும் ஆளின்றிப் போனது

எவரும் எதிர்பாரா தருணம் - நில
நடுக்கத்தால் எத்தனை மரணம் - மகிழ்ச்சி
மீண்டும் என்று மலரும்? - அந்த
நாளும் விரைவில் வரணும்


-இராஜகுரு
(02 / ஜனவரி / 2005)

(குறிப்பு: "தருணம்" என்பது தமிழ்ச் சொல் அல்ல. 'அதை மாற்றினால் அங்கு அமைந்த ஓசை மாறக்கூடும். அதனால் அதை மாற்ற வேண்டாம்' என்ற நண்பர் ஒருவரின் கருத்துக்காக அதை மாற்றவில்லை)

Tuesday, June 16, 2009

அவசரமாய் எழுதிய கவிஞர்களுக்கு!

26 டிசம்பர் 2004. சுனாமி தமிழகத்தையும் தாக்கிய நாள். அதற்கு அடுத்த சில நாட்களில் வெளிவந்த பல பத்திரிகை இதழ்களிலும் சுனாமி குறித்து புதுக்கவிதைகள். முக்கிய பக்கங்களில் வெளிவந்த கவிதைகளை எழுதியவர்கள் எல்லோரும் அன்றும் இன்றும் திரைப்பட பாடலாசிரியர்களாகவும் தமிழக அரசியலில் பெரும் புள்ளிகளாகவும் கொடிகட்டிப் பறப்பவர்கள்.

அத்தனை பெரும் தத்தம் கவிதைகளில், சுனாமி ஏற்பட்டதற்கு கடலே காரணமென்று கடலைக் குற்றவாளியாக்கி எண்ணற்றப் பழிகளைக் கடல்மேல் சுமத்தியிருந்தனர்.

பள்ளிக்கூடம் முடிந்தவுடன் எத்தனையோ நாட்கள் நானும் என் நண்பனும் விளையாடச் சென்ற இடம் கடற்கரை. எங்களை தினம்தினம் வரச்சொல்லி அழைத்தது கடல்.

அத்தகைய கடலைச் சாடி எத்தனைக் கவிதைகள்!

"நெஞ்சு பொறுக்க விலையே - அந்த
மதிகெட்ட கவிதைகளைப் படித்ததிலே"

அதன்பின், கடல் குற்றமற்றது என்பதை காட்டுவதற்காகவே நானும் எழுதினேன் ஒரு கவிதை. அவர்கள் எழுதிய அதே புதுக்கவிதை நடையில்.

சமீபத்தில், நண்பர் அகரம் அமுதா அவர்களின் வலைப்பதிவிலும் அதேபோல் சுனாமி குறித்து கடலைச் சாடிய கவிதை ஒன்று படித்தேன். என் எண்ணத்தை அவரிடம் தெரிவித்தேன். "உன் கவிதையை வெளியிடு. தவறில்லை" என்றார். அவர் அனுமதியுடன், இதோ அந்தக் கவிதை...

சுனாமி குறித்து கவிதை எழுதிய
கவிஞர்களுக்கு ஒரு கடிதம்

எதுகை மோனை கைவசம் இருப்பதால்
எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாமா?

உப்பிட்டவரை மறப்பதே பாவம் - நீங்களோ
உப்பளித்த கடலை மிதித்தே விட்டீர்களே

கடலுக்கா உயிர்களைப் பறிக்கும் ஆசை?
ஐயோ! இன்று நீங்களல்லவா
கடலைக் கொலை செய்யத் துடிக்கிறீர்கள்

அழகிய நிறமல்லவா நீலம் - அதை
நஞ்சென்று சொல்வதா உங்கள் எண்ணம்?

கடல் என்ற சொல் கூட 'அழகு' தானே - அதை
எப்படி உங்களால் 'அழுக்'காக்க முடிந்தது

ஆழிப் பேரலையால்
ஆயிரம் உயிர்கள் சாகும் என்று
கடலுக்கு எப்படித் தெரியும்

சுனாமி வந்தது உண்மைதான் - அனால்
சாகடிப்பது அதன் நோக்கமில்லையே

கடல் என்ன தானாகவா கொந்தளித்தது?
நில நடுக்கத்தால் தானே கொந்தளித்தது

இது காலத்தின் செயல்
என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
காலத்தை உங்களால் ஏச முடியுமா?

இளமைக்குப் பின் முதுமை வருவதால்
முதுமையை ஏசுபவர் உண்டோ?

காலத்தின் மாற்றத்திற்கு
கடலும் கட்டுப்பட்டதுதான்

காலத்தின் மாற்றத்தால் கொந்தளித்த கடலை
குற்றம் சொல்வது கவிஞனுக்கு அழகில்லை

காலத்தையும் - அதன்
மாற்றத்தையும் - கற்பனையால்
ஏற்றிச் சொல்லி - அதைப்
போற்றுபவன் அல்லவா கவிஞன்

கடல் இல்லையேல் மேகம் திரளுமா?
மேகம் இல்லையேல் மழை பொழியுமா?
மழை இல்லையேல் மண் விளையுமா?
விளைச்சல் இல்லையேல் உணவு கிடைக்குமா?
உணவு இல்லையேல் உயிர்கள் பிழைக்குமா?

கடலைச் சாடும் கவிகளே
கடலின்றி உங்களால் இருக்க முடியுமா?

வலை வீசிக் கடலின் மீன்களைப் பிடிக்கும்
மனிதனைப் போற்றும் நீங்கள்
ஒரே ஒரு நாள்
அலை வீசி மனிதனைப் பிடித்ததால்
கடலை ஏசுவது சரியோ?

கடலைச் சாடியது போதாதென்று - சிலர்
நிலத்தின் மீதும் பழிசுமத்தி விட்டீர்கள்
நிலம் ஏன் நடுங்கியது
என்பதை சிந்தித்தீர்களா?

மரங்களைச் சாய்த்தோம் - மண்ணின்
வளங்களை மாய்த்தோம்
நிலத்தைக் குடைந்தோம் -அதன்
நீரை உறிஞ்சினோம்
முடிந்தவரை தோண்டினோம் - மண்
கொண்டதை எல்லாம் பிடுங்கினோம்
நிலம் கொடுத்ததைக் காட்டிலும்
நாம் எடுத்ததே அதிகம்

நெஞ்சு குளிர எடுத்துக் கொண்டு - வெறும்
நஞ்சைத்தானே மண்ணிற் களித்தோம்

இன்னும் என்ன செய்வோமோ என்ற
பயத்தால்தானே நிலம் நடுங்கியது
அதனால்தானே கடல் பொங்கியது

நிலம் நடுங்கியதற்கும்
கடல் பொங்கியதற்கும்
காரணம் காலம்

காலம் செய்த குற்றத்திற்கு
கடலைச் சாடுவது சரியோ கவிகளே?

எனக்கும் எழுதத் தெரியும் என்பதற்காகவோ
உங்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவோ
நான் எழுதவில்லை

உங்களைப் பிறர் ஏற்க வேண்டும்
என்பதற்காகவே எழுதுகிறேன்

உயிர் எவர்க்கும் சொந்தமல்ல
அதைக் கொடுப்பதும் எடுப்பதும்
காலத்தின் கையில்

நன்றி.

-இராஜகுரு
(04 / ஜனவரி / 2005)