Monday, January 26, 2009

புகழ்ச்சி

"பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொன்னுக்கும் மயங்காதவர்கள் கூட புகழுக்கு மயங்குவதுண்டு. புகழ்ச்சியும் பாராட்டுமே ஒருவன் தன் செயல்களில் மேலும் வெற்றி பெறுவதற்கான ஊக்குவிப்பாக அமையக்கூடும். ஆனால் மிகுந்த புகழ்ச்சி ஒருவனின் கர்வத்தை அதிகப்படுத்தி அவனது வீழ்ச்சிக்கே காரணமாகவும் அமையக்கூடும்.

இந்த சூட்சுமம் தெரிந்த சிலர் தங்கள் காரியத்தை மற்றவர்களை புகழ்ந்தே சாதித்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் மிகுந்த புகழ்ச்சிக்கு மயங்காது நிலையாக இருக்கிறார்கள்.

அதுபோன் புகழ்ச்சிக்கு நானும் ஒருமுறை ஆளான போதுதான் இந்தக் கவிதையை எழுதினேன்".

கொண்டநற் றிறனைக் காட்டிய பின்னே
கண்டவர் அனைவரும் புகழ்கிறார் இங்கே
வேண்டாம் இந்தப் பெரும்புகழ் என்னை
வீணென் றாக்கும் ஆணவம் பற்றும்
சான்றோர் தம்மைக் கண்டால் என்னுள்
தோன்றும் அடக்கம் தொலைந்தே போகும்
சிறிதாய் இங்கோர் வீழ்ச்சிவந் தாலும்
பெரிதாய்த் தோன்றும் காண்பவர்க் கிங்கே
இகத்தை ஆளுந் திறமிருந் தாலும்
புகழ்வ திங்கே யிருக்கட்டும் அளவாய்

-இராஜகுரு

Thursday, January 1, 2009

புத்தாண்டுப் பொன்வானம்

வாசகர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்.

"நேற்றைய இரவு (31.12.2008). புத்தாண்டை வரவேற்க அத்தனை விழிகளும் ஆவலாய் விழித்துக் கொண்டிருந்த இரவு.
மற்ற இரவுகளுடன் சற்றே முரண்படும் இரவு.
புத்தாண்டு தொடங்கி அரை நிமிடம் வரை மட்டும் அந்த இரவு வானில் வண்ண மணிச்சிதறல்களாய் எத்தனை வான வேடிக்கைகள்.

வண்ணங்கள் சிதறும் வன்ன வானம்.
அந்த வன்ன வானுக்கு ஒரு சின்னக் கவிதை".

ஒளித்துளிகள் சிதறுவதால் வானிலிந்த வண்ணமென்றார் - அதில்
பனித்துளியின் சிதறல்களோ மின்னுமிந்த விண்மீன்கள்

ஒளித்துளிகள் தான்சிந்தி மின்னும்விண் மீன்களொடே - வண்ண
மணிச்சிதறல் போலழகு பொழியும்வான் வேடிக்கை

தனித்தனியாய் சிதறுகின்ற எழிற்றுளிகள் சேர்ந்ததனால் - இங்கே
தனிச்சிதறா அழகெடுத்தப் புத்தாண்டுப் பொன்வானம்.

- இராஜகுரு