பனிகொண்ட காற்றலைகள் மேனிதொடும் காலையில்நான்
தனிநின்றுக் கொண்டேதோ சிந்தித்திருந் தேனங்கே
கனிகொள்ளப் பூவிரித்து மகரந்த மென்கின்ற
மணிகொள்ளக் காத்திருந்த செடியொன்று கண்டேன் - அது
மெய்யழகு தனைக்கூட்ட மொய்குழலில் மலர்ச்சூடிப்
பொய்யழகே காட்டுகின்றப் பாவையரைப் பழிப்பதுபோல்
தன்மேனி தனில்பூத்த தன்பூவை யேசூடி
தன்னழகு காட்டுகின்றப் பேரழகாய் நின்றதந்த
மண்தொட்ட மலர்ச்செடியின் பனிதொட்ட மலரழகை
பண்தொட்டுப் பாடிடவே சிந்தித்த போதங்கே
வளைவுகளால் அழகுசொல்லும் இடையாட மணிகொண்டு
விளையாட அழைக்கின்ற கலசங்கள் அசைந்தாட
பேரழகின் பொருள்சொல்லும் பாவையர்கள் எல்லோர்க்கும்
பேரரசி போலொருத்தி வந்துநின்றாள் பூத்திருந்த
பூவதனை நொடிப்பொழுதில் கொய்தெடுத்தாள் நெஞ்சத்தில்
மேவிவந்த சிந்தனையில் நெருப்பள்ளி வைத்ததுபோல்
பாவியவள் செய்தசெயல் எனையாக்கி விட்டதம்மா
அன்பென்னும் அறத்திற்கு பட்டாங்கின் விளக்கங்கள்
என்புதோலு திரங்கொண்ட வர்களுக்கே பொருந்துவதோ?
சதைநரம்பில் உண்டாகும் உணர்வுகளும் வலிகளும்தான்
விதைகொண்டு தோன்றுமொரு மரல்ச்செடிக்குண் டாகாதோ?
கரமறுத்தல் பாவமென்னில் மலர்கொய்த லும்பாவம்
சிரமறுத்தல் பாவமென்னில் மரமறுத்த லும்பாவம்
வன்முறையும் சுயநலமும் கருக்கொண்ட மனிதவினம்
நன்நெறியென் றுரைப்பதெலாம் பொய்கொண்ட நெறிகள்தான்
அறமென்றும் பாவமென்றும் இவர்சொல்லும் கதைகளுமே
பொய்கள்தான் பொய்கள்தான் அத்தனையும் பொய்கள்தான்
-இராஜகுரு
Showing posts with label Raajaguru. Show all posts
Showing posts with label Raajaguru. Show all posts
Friday, March 25, 2011
Monday, June 15, 2009
அன்பு
பெற்றெடுத்த பிள்ளை பிறப்பளித்த அன்னையென
சுற்றிநிற்கும் சுற்றத்தார் யாவர்க்கும் - மற்றிவ்
வுலகினில் வாழும் உயிர்களனைத் திற்கும்
நலனே நினைப்பதாம் அன்பு
பொன்னாலே ஆலயமொன் றமைத்தாலும்
பூவாலே பூஜைகள் செய்தாலும்
எந்நாளும் இறையோனை நினைப்பதுவாய்
பன்னாட்கள் விரதம்மேற் கொண்டாலும்
பெண்மீதும் மண்மீதும் பொன்மீதும்
கொண்டஆசை அத்தனையும் கொன்றாலும்
அன்புள்ளம் இல்லாத பேரானால்
இறையோனைச் சரண்புகுதல் இயலாதே
மண்ணோடு புரளும்புழு வானாலும்
விடங்கொண்டு தீண்டும்பாம் பானாலும்
எண்ணிடையே எல்லாம்ஓர் உயிரென்னும்
உண்மையினை உள்நிறுத்தி யார்மாட்டும்
அன்புடையார் எல்லோரும் மேலோர்இங்(கு)
அஃதில்லா தார்யாருங் கீழோர்மெய்
அன்புடையார்க் கேஇறைவன் அருளுண்டாம்
அன்பில்லா தார்க்கென்றும் வேதனையே
சொல்லாலே விளங்காதே அன்பிங்கே
சொற்களினால் விளக்குதலும் இயலாதே
பல்லோரும் வணங்குகின்ற இறையோனைச்
சில்லோரே தாரணியில் உணர்வதுபோல்
நல்லோராய் வாழ்வாரே யானாலும்
சில்லோரே அன்புதனை உனர்ந்திடுவார்
எல்லாமாய் விளங்குகின்ற இறையோனை
உணர்விக்கும் நெறியென்றால் அன்பொன்றே
இன்பத்தின் பொருளறியார் அன்பிலாதார்
எஞ்ஞான்றும் பிறர்மகிழ அன்பளித்தே
இன்புறுவார் நெஞ்சத்தால் அன்புடையார்
தாரணியின் அன்பொன்றே சிவமென்றார்
முன்னோரும் சொன்னதுவே இன்னார்க்கும்
அன்புடையா ரானவர்கட்(கு) உண்டெனினும்
துன்பெல்லாம் துரும்பாகும் அன்புடையார்
மன்னுலகும் கண்டவராம் மண்ணகத்தே
- இராஜகுரு
சுற்றிநிற்கும் சுற்றத்தார் யாவர்க்கும் - மற்றிவ்
வுலகினில் வாழும் உயிர்களனைத் திற்கும்
நலனே நினைப்பதாம் அன்பு
பொன்னாலே ஆலயமொன் றமைத்தாலும்
பூவாலே பூஜைகள் செய்தாலும்
எந்நாளும் இறையோனை நினைப்பதுவாய்
பன்னாட்கள் விரதம்மேற் கொண்டாலும்
பெண்மீதும் மண்மீதும் பொன்மீதும்
கொண்டஆசை அத்தனையும் கொன்றாலும்
அன்புள்ளம் இல்லாத பேரானால்
இறையோனைச் சரண்புகுதல் இயலாதே
மண்ணோடு புரளும்புழு வானாலும்
விடங்கொண்டு தீண்டும்பாம் பானாலும்
எண்ணிடையே எல்லாம்ஓர் உயிரென்னும்
உண்மையினை உள்நிறுத்தி யார்மாட்டும்
அன்புடையார் எல்லோரும் மேலோர்இங்(கு)
அஃதில்லா தார்யாருங் கீழோர்மெய்
அன்புடையார்க் கேஇறைவன் அருளுண்டாம்
அன்பில்லா தார்க்கென்றும் வேதனையே
சொல்லாலே விளங்காதே அன்பிங்கே
சொற்களினால் விளக்குதலும் இயலாதே
பல்லோரும் வணங்குகின்ற இறையோனைச்
சில்லோரே தாரணியில் உணர்வதுபோல்
நல்லோராய் வாழ்வாரே யானாலும்
சில்லோரே அன்புதனை உனர்ந்திடுவார்
எல்லாமாய் விளங்குகின்ற இறையோனை
உணர்விக்கும் நெறியென்றால் அன்பொன்றே
இன்பத்தின் பொருளறியார் அன்பிலாதார்
எஞ்ஞான்றும் பிறர்மகிழ அன்பளித்தே
இன்புறுவார் நெஞ்சத்தால் அன்புடையார்
தாரணியின் அன்பொன்றே சிவமென்றார்
முன்னோரும் சொன்னதுவே இன்னார்க்கும்
அன்புடையா ரானவர்கட்(கு) உண்டெனினும்
துன்பெல்லாம் துரும்பாகும் அன்புடையார்
மன்னுலகும் கண்டவராம் மண்ணகத்தே
- இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
அனுபவம்,
அன்பு,
இராஜகுரு,
கவிதை,
மரபுக் கவிதை
Monday, January 26, 2009
புகழ்ச்சி
"பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொன்னுக்கும் மயங்காதவர்கள் கூட புகழுக்கு மயங்குவதுண்டு. புகழ்ச்சியும் பாராட்டுமே ஒருவன் தன் செயல்களில் மேலும் வெற்றி பெறுவதற்கான ஊக்குவிப்பாக அமையக்கூடும். ஆனால் மிகுந்த புகழ்ச்சி ஒருவனின் கர்வத்தை அதிகப்படுத்தி அவனது வீழ்ச்சிக்கே காரணமாகவும் அமையக்கூடும்.
இந்த சூட்சுமம் தெரிந்த சிலர் தங்கள் காரியத்தை மற்றவர்களை புகழ்ந்தே சாதித்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் மிகுந்த புகழ்ச்சிக்கு மயங்காது நிலையாக இருக்கிறார்கள்.
அதுபோன்ற புகழ்ச்சிக்கு நானும் ஒருமுறை ஆளான போதுதான் இந்தக் கவிதையை எழுதினேன்".
கொண்டநற் றிறனைக் காட்டிய பின்னே
கண்டவர் அனைவரும் புகழ்கிறார் இங்கேவேண்டாம் இந்தப் பெரும்புகழ் என்னை
வீணென் றாக்கும் ஆணவம் பற்றும்
சான்றோர் தம்மைக் கண்டால் என்னுள்
தோன்றும் அடக்கம் தொலைந்தே போகும்
சிறிதாய் இங்கோர் வீழ்ச்சிவந் தாலும்
பெரிதாய்த் தோன்றும் காண்பவர்க் கிங்கே
இகத்தை ஆளுந் திறமிருந் தாலும்
புகழ்வ திங்கே யிருக்கட்டும் அளவாய்
-இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
இராஜகுரு,
கவிதை,
புகழ்ச்சி,
மரபுக் கவிதை
Thursday, January 1, 2009
புத்தாண்டுப் பொன்வானம்
வாசகர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்.
"நேற்றைய இரவு (31.12.2008). புத்தாண்டை வரவேற்க அத்தனை விழிகளும் ஆவலாய் விழித்துக் கொண்டிருந்த இரவு.
மற்ற இரவுகளுடன் சற்றே முரண்படும் இரவு.
புத்தாண்டு தொடங்கி அரை நிமிடம் வரை மட்டும் அந்த இரவு வானில் வண்ண மணிச்சிதறல்களாய் எத்தனை வான வேடிக்கைகள்.
வண்ணங்கள் சிதறும் வன்ன வானம்.
அந்த வன்ன வானுக்கு ஒரு சின்னக் கவிதை".
ஒளித்துளிகள் சிதறுவதால் வானிலிந்த வண்ணமென்றார் - அதில்
பனித்துளியின் சிதறல்களோ மின்னுமிந்த விண்மீன்கள்
ஒளித்துளிகள் தான்சிந்தி மின்னும்விண் மீன்களொடே - வண்ண
மணிச்சிதறல் போலழகு பொழியும்வான் வேடிக்கை
தனித்தனியாய் சிதறுகின்ற எழிற்றுளிகள் சேர்ந்ததனால் - இங்கே
தனிச்சிதறா அழகெடுத்தப் புத்தாண்டுப் பொன்வானம்.
- இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
இரவு வானம்,
இராஜகுரு,
கவிதை,
புத்தாண்டுப் பொன்வானம்,
மணிச்சிதறல்,
மரபுக் கவிதை,
வானம்
Sunday, October 26, 2008
சிறகுகள் விரிக்கும் ஆசை
"பறவைகள் பறப்பதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அது ஒரு பெரும் அதிசயமாகவே தோன்றும். ஒரு பறவை தன் சிறகுகளை அசைத்தும் வானில் ஏறி எந்தப் பிடிப்பும் இல்லாமல் காற்றில் செல்வதும், பின் அசைவுகளின்றி மிதந்து செல்வதும், பறந்து செல்வதும் என் மனதில் புதுப்புது உணர்வுகளை உண்டாக்கும்.
பறவைகளும் பறவைகள் பறக்கும் அழகும் மிகவும் பிடித்துவிட்டதால் எனக்கும் பறக்க வேண்டும் என்றொரு ஆசை.
அந்த ஆசையின் பிரதிபலிப்பே இந்தக் கவிதை..."
அந்த ஆசையின் பிரதிபலிப்பே இந்தக் கவிதை..."
செந்நிலவு தோன்றுமொரு செவ்வந்தி வேளையிலே
வண்ணமுறு பூப்பூக்கும் வாசமிகு சோலைதனில்
வண்டாடும் பூக்களைநான் ரசித்திருந்தேன்; அந்நேரம்
கொண்டாடிச் சிறகடித்து வந்ததொரு சிறுபறவை
வண்ணச் சிறகடித்து வெள்ளிவான வீதியில்
சின்னஞ் சிறுபறவை சின்னதொரு வட்டமிட்டு
என்னை நெருங்கிவந்தென் அருகில் அமர்ந்ததுகாண்
மின்னும் விழிகளினால் என்னைப் பார்த்ததுகாண்
செம்மண்ணில் தனைபுதைத்து சீர்கூட்டுஞ் சோலைவிட்டு
செவ்வானில் தனைபுதைக்கச் சென்றதந்த சிறுபறவை
அவ்வானில் அதுபறந்த அழகுதனைக் கண்டதனால்
என்வானம் போல்நெஞ்சில் எழுந்ததொரு ஆசையம்மா
நான்கண்ட சிறுபறவை மீண்டும்வர வேண்டும்
பறவையோடு நீங்காத நட்புகொள்ள வேண்டும்
பொன்மாயச் சிறகிரண்டு எனக்கென்று தந்து
பறப்பதற்கும் அப்பறவை பயிற்சிதர வேண்டும்
கிளைவிட்ட நெடுமரங்கள் தனில்சிக்கிக் கொண்டும்
சற்றுயரப் பறந்தேஎன் தோல்தேய வீழ்ந்தும்
பறவைதரும் பயிற்சியிலே சிலநாட்கள் கழியும்
பின்தொடங்கும் பொன்வானில் தனியாய்என் பயணம்
வன்னநிலா வீசிவரும் வான்சிவக்கும் நேரம்
என்மாயச் சிறகுகளை நான்விரிக்க வேண்டும்
செல்லாத இடமெல்லாம் சென்றுவர வேண்டும்
சொல்லாத உணர்வுகளும் என்னுள்ளே தோன்றும்
அலைகடலின் மேல்பறந்து விளையாடிக் கொண்டும்
கலைகின்ற மேகத்தின் உட்புகுந்து சென்றும்
மலையழகும் நதியழகும் நான்காண வேண்டும்
கலையழகு தோன்றவதைக் கவிபாட வேண்டும்
வேனிற் கால வெயிலில் ஒருநாள்
மேகம் திரண்டு பொழிய வேண்டும் - அந்த
மழையில் என்றன் சிறகுகள் நனைய
பாடிக் கொண்டு பறக்க வேண்டும்
ஆசையம்மா ஆசை - இது
சிறகுகள் விரிக்கும் ஆசை
காற்றைக் கிழித்துக் கொண்டு - வானில்
பறந்துச் செல்லும் ஆசை
ஆயிரம் ஆசைகள் அவரவர்க்(கு) உண்டு - என்
பறக்கும் ஆசை அதிலே ஒன்று
சிறகுகள் இரண்டு விரித்துக் கொண்டு - நான்
வானம் தொட்டுப் பறப்ப தென்று?
சின்னப் பறவைகள் பாடும் போதும்
வண்ணப் பறவைகள் பறக்கும் போதும்
எண்ணச் சிறகுகள் ஆயிரம் விரித்தே
என்னுள் புதுப்புது உணர்வுகள் தோன்றும்
வண்ணப் பறவையாய் சிறகுகள் விரித்து
வானில் பறப்ப தியலா தெனினும்
எண்ணச் சிறகுகள் விரிப்பேன்; என்றன்
கற்பனை வானில் பறந்து திரிவேன்
-இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
ஆசை,
இராஜகுரு,
கவிதை,
சிறகுகள் விரிக்கும் ஆசை,
மரபுக் கவிதை
Sunday, August 31, 2008
பூச்சூடினாள் பூவை
அந்தியிலே பூத்தமலர் அப்பொழுதே கொய்ததெண்ணி
நொந்து நொந்து நெஞ்சமெலாம் நோக - வண்ணப்
பூச்சரமாய் மாறியதில் பயனுண்டா என்றுசொல்லிக்
கூச்சலிட முடியாமல் பூக்கடையில் வாட
அந்த வேளையிலே வந்து நின்ற
நங்கையவள் பட்டுவிரல் பட்டவுடன் மொட்டுமலர்
தங்கமென ஜொலித்ததென்ன சொல்ல; அடடா
கன்னியவள் பூச்சூடும் அழகதனைக் கண்டால்தான்
அந்தநாள் இனியநாள் கும்; அன்னவள்
மொய்குழலில் சூடுகின்ற மலர்கொண்ட வாசத்தில்
மெய்மறந் திருந்தால்தான் வாழ்வில்சுகம் சேரும்.
- இராஜகுரு
நொந்து நொந்து நெஞ்சமெலாம் நோக - வண்ணப்
பூச்சரமாய் மாறியதில் பயனுண்டா என்றுசொல்லிக்
கூச்சலிட முடியாமல் பூக்கடையில் வாட
அந்த வேளையிலே வந்து நின்ற
நங்கையவள் பட்டுவிரல் பட்டவுடன் மொட்டுமலர்
தங்கமென ஜொலித்ததென்ன சொல்ல; அடடா
கன்னியவள் பூச்சூடும் அழகதனைக் கண்டால்தான்
அந்தநாள் இனியநாள் கும்; அன்னவள்
மொய்குழலில் சூடுகின்ற மலர்கொண்ட வாசத்தில்
மெய்மறந் திருந்தால்தான் வாழ்வில்சுகம் சேரும்.
- இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
இராஜகுரு,
கவிதை,
பெண்ணழகே பேரழகு,
மரபுக் கவிதை
நாளிரண்டு ஆகியதே
வான்வெளியில் பூத்திருக்கும் வாசமலர்ச் சோலையதில்
நான்பறந்து திரிவதுபோல் நாளும்ஒரு கனவுவர
தேன்கொண்ட சுவைகொண்ட தேமதுர குரல்கொண்ட
நான்கண்ட நங்கையவள் நெஞ்சினிக்கப் பேசிடுவாள்
பூமலரும் பாவைமுகம் பார்த்துவிட்டால் இதயத்தில்
பாமலரும் பருவமகள் பார்வைகளாள் பூமியிலே
தேன்மலரும் கான்மலரும் ஏன்மலரும் ஊன்சிவந்த
வான்மலராய் வந்தவள்என் மடிசாய்ந்து சிரித்திருக்க
பேரழகு கொண்டவளை பக்கத்தில் கொண்டவரை
நூறுநூறு பாடல்கள் நொடிகளிலே பாடியவன்
சோகத்தில் வாடுகிறேன் சொல்லேதும் சொல்லாமல்
ஏகத்தில் எனைவிட்டு எங்குசென்றாள் என்பைங்கிளி
தங்கமகன் எனையிங்குத் தனிமையிலே தவிக்கவிட்டு
சிங்காரச் சீரழகி சுகம்இழந்து போனாளோ
ஊர்விட்டுப் போனாளோ தவிக்கின்றேன் எனக்கிங்கு
யார்வந்துச் சொல்வார்கள் என்னவளின் நிலையெதுவோ?
நாளிரண்டு ஆகியதே நங்கையவள் முகம்கண்டு
வாளிரண்டு பட்டதுபோல் வலிக்கின்ற(து) என்நெஞ்சம்
தோளிரண்டும் நான்சாயத் தானென்றுச் சொன்னாளே
நாளெல்லாம் என்நெஞ்சை நோகவிட்டுச் சென்றாளே
அடடா...
ஏன்வருந்த வேண்டும்நான் எனைமறக்க வில்லையவள்
ஏன்புலம்பு கின்றேன்எனில் என்னருகில் இல்லையவள்
ஒருபோதும் என்நினைவை மறந்தவளும் இல்லையவள்
விரைந்தேதான் வருவாளே நான்பாடும் தேவியவள்.
- இராஜகுரு
நான்பறந்து திரிவதுபோல் நாளும்ஒரு கனவுவர
தேன்கொண்ட சுவைகொண்ட தேமதுர குரல்கொண்ட
நான்கண்ட நங்கையவள் நெஞ்சினிக்கப் பேசிடுவாள்
பூமலரும் பாவைமுகம் பார்த்துவிட்டால் இதயத்தில்
பாமலரும் பருவமகள் பார்வைகளாள் பூமியிலே
தேன்மலரும் கான்மலரும் ஏன்மலரும் ஊன்சிவந்த
வான்மலராய் வந்தவள்என் மடிசாய்ந்து சிரித்திருக்க
பேரழகு கொண்டவளை பக்கத்தில் கொண்டவரை
நூறுநூறு பாடல்கள் நொடிகளிலே பாடியவன்
சோகத்தில் வாடுகிறேன் சொல்லேதும் சொல்லாமல்
ஏகத்தில் எனைவிட்டு எங்குசென்றாள் என்பைங்கிளி
தங்கமகன் எனையிங்குத் தனிமையிலே தவிக்கவிட்டு
சிங்காரச் சீரழகி சுகம்இழந்து போனாளோ
ஊர்விட்டுப் போனாளோ தவிக்கின்றேன் எனக்கிங்கு
யார்வந்துச் சொல்வார்கள் என்னவளின் நிலையெதுவோ?
நாளிரண்டு ஆகியதே நங்கையவள் முகம்கண்டு
வாளிரண்டு பட்டதுபோல் வலிக்கின்ற(து) என்நெஞ்சம்
தோளிரண்டும் நான்சாயத் தானென்றுச் சொன்னாளே
நாளெல்லாம் என்நெஞ்சை நோகவிட்டுச் சென்றாளே
அடடா...
ஏன்வருந்த வேண்டும்நான் எனைமறக்க வில்லையவள்
ஏன்புலம்பு கின்றேன்எனில் என்னருகில் இல்லையவள்
ஒருபோதும் என்நினைவை மறந்தவளும் இல்லையவள்
விரைந்தேதான் வருவாளே நான்பாடும் தேவியவள்.
- இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
இராஜகுரு,
கவிதை,
பெண்ணழகே பேரழகு,
மரபுக் கவிதை
கனவு நங்கை
(கனவு...)
நித்திரையில் காணாக் கனவாக - எந்தச்
சித்திரமும் காட்டா அழகாக - எனைச்
சுற்றி வரும் வண்ண நிழலாக
பெண்ணொருத்தி உள்ளத்தை கொஞ்சிவிளையாடுகின்றாள்
மண்ணுலகில் எங்கோ இருப்பவளா? - என்
உள்ளத்தில் மட்டும் வசிப்பவளா? என்
எண்ணத்தைக் கெடுக்க வந்தவளா?
தெரியாமல் இவளை நான் திக்கெட்டும் தேடுகின்றேன்
உள்ளத்தின் வண்ணக் கனவுகளில் - என்
நெஞ்சத்தைக் கொஞ்சும் நினைவுகளில் - என்
சிந்தைக்குள் தோன்றும் கவிதைகளில்
காதலியாய்க் கொண்டிவளைக் கற்பனையில் வாழ்கின்றேன்
வெண்ணிலவின் வெள்ளி மண்ணெடுத்துப் - பொன்
வண்டுகள் சேர்த்தத் தேன்தெளித்து - வந்தப்
பூவனத்தின் வண்ணப் பூவெடுத்துக்
கோதையிவள் காதருகில் சூடிதினம் ரசிக்கின்றேன்
வான்சிவக்கும் அந்தி வேளையிலே - தென்றல்
பூவிரிக்கும் வண்ணச் சோலையிலே - அன்பு
கொண்டவளின் மடி மீதினிலே
தலைசாய்த்து நானுறங்க தலைகோது வாள்கோதை
(நனவு...)
நித்திலமாய் - ஒரு
சித்திரமாய் - ஒளி
முத்திரையாய்- உயர்
ரத்தினமாய்
பெண்ணினத்தின் - பேர்
அழகியென - இப்
பூவுலகின் - பூந்
தேவியென
முப்பொழுதும் - ஏன்
எப்பொழுதும் - ஒரு
சொப்பனமாய் - உள்
நிற்பவளை
கண்ணெதிரே - நான்
கண்டேனே - அவள்
பேரழகை - இனிப்
பாடுகிறேன்
(அழகு...)
சுந்தரத் தெலுங்கவள் தாய்மொழி யாம்தினம்
செந்தமிழ் பேசிச் சிரித்திடு வாள்அவள்
மந்திர விழியால் சிந்தும் பார்வைச்
சிந்தையைக் கெடுக்கும்; கனவிலும் அவள்முகம்
வந்தெனை மயக்கும்; காற்றில் பட்டக்
கந்தக மாய்என் நெஞ்சம் எரியும்
மந்திர விழிகளைக் கண்டுவிட்டால்; அவளோ
சந்தனப் பூமண நந்தவன மாய்என்
அந்தரங்க ஆசையில் நிறைந்து விட்டாள்
அந்திநேரக் கனவுகளில் கலந்து விட்டாள்
துள்ளிவரும் காலழகைக் கையிரண்டில் ஏந்திதினம்
அள்ளிவிளை யாடியொரு காவியம் - கள்ளியவள்
பொன்சிரிப்பைப் பார்த்துதினம் நான்படிக்கக் கூப்பிடுமே
மன்மதன் தன்பூ வனம்
பின்னிவைத்தக் கூந்தலிலே சேராமல்
சிரித்திருக்கும் சிறுமுடிகள்
கன்னியவள் காதருகில் மின்னுவது
தானென்றும் பேரழகு
பொன்சிரிப்புப் பூவிதழில் செம்பருத்திப்
பூஞ்சிவப்புக் கண்டவுடன்
என்நெஞ்சின் தாழ்திறக்கும்; கன்னியவள்
அருகினிலே தானழைக்கும்
நடனங்களின் அழகு குறைந்து விடவே
நடப்பாள் அவளும் பூமியின் மேலே
நடையின் அழகைக் காண்பதற்கென்றே
தொடர்ந்தேன் அவளை தினமும் பின்னே
ஒளியலைகள் பாராத அண்டத்தின்
வெளியினிலே சூழ்ந்த இருளெடுத்து
வெண்ணிலவின் வெள்ளொளியில் தொட்டெடுத்து
மின்னுகிற பேரழகாய்க் கார்குழலை
என்னதவம் செய்திறைவன் செய்தானோ
என்னவளின் எழில்கூடத் தந்தானோ
(தெளிவு...)
காத்திருந்து காத்திருந்து கன்னிமகள் வருவதைப்
பார்த்துவிட்டால் ஏனோ படபடக்கும் நெஞ்சமெலாம் - தினம்
பூத்திருக்கும் செந்நிறத்துப் பூவையெல்லாம் தேனிலிட்டுச்
சேர்த்தெடுத்த அழகதனைக் கன்னமெனக் கொண்டவளாம் - அவள்
நேத்திரத்தின் அசைவுகளில் நெஞ்சும் அசைந்தாடும்
பார்த்திருந்தால் வேறுதிசை பார்க்கவும் மறந்துவிடும்
முப்போதும் அவளழகில் மயங்கிநின்ற மன்னனிவன்
இப்படியே அவளழகை இடைவிடாது பாடிடலாம் - ஆனால்
வனப்பாலே மட்டுந்தான் பேரழகி அன்னவள்
குணத்தாலே எப்படியோ கண்டதில்லை ஒருபோதும்
கனவுநங்கைப் போலிருந்தாள் கனவுகளில் வலம்வந்தாள்
நினைவினிலும் சிலகாலம் நின்றிருந்தாள் கோதைமகள் - நானும்
இளமை கொண்டாடும் அவளழகில் மயங்கியே
சபலம் கொண்டேன் சலனம் கொண்டேன்
இனியும் அவளை நினைத்திருந் தால்என்
மனதில் அமைதி மறைந்து போகும்
பாதியில் வந்தவள் பாதியில் போனாள் - இனி
ஆதியில் எனக்கெனப் பிறந்தவள் எவளோ
அவள்வரும் நாள்வரைக் காத்திருக்கும் இதயம்
அவள்வந்த பின்னால் நாளும் பூத்திருக்கும்
- இராஜகுரு
நித்திரையில் காணாக் கனவாக - எந்தச்
சித்திரமும் காட்டா அழகாக - எனைச்
சுற்றி வரும் வண்ண நிழலாக
பெண்ணொருத்தி உள்ளத்தை கொஞ்சிவிளையாடுகின்றாள்
மண்ணுலகில் எங்கோ இருப்பவளா? - என்
உள்ளத்தில் மட்டும் வசிப்பவளா? என்
எண்ணத்தைக் கெடுக்க வந்தவளா?
தெரியாமல் இவளை நான் திக்கெட்டும் தேடுகின்றேன்
உள்ளத்தின் வண்ணக் கனவுகளில் - என்
நெஞ்சத்தைக் கொஞ்சும் நினைவுகளில் - என்
சிந்தைக்குள் தோன்றும் கவிதைகளில்
காதலியாய்க் கொண்டிவளைக் கற்பனையில் வாழ்கின்றேன்
வெண்ணிலவின் வெள்ளி மண்ணெடுத்துப் - பொன்
வண்டுகள் சேர்த்தத் தேன்தெளித்து - வந்தப்
பூவனத்தின் வண்ணப் பூவெடுத்துக்
கோதையிவள் காதருகில் சூடிதினம் ரசிக்கின்றேன்
வான்சிவக்கும் அந்தி வேளையிலே - தென்றல்
பூவிரிக்கும் வண்ணச் சோலையிலே - அன்பு
கொண்டவளின் மடி மீதினிலே
தலைசாய்த்து நானுறங்க தலைகோது வாள்கோதை
(நனவு...)
நித்திலமாய் - ஒரு
சித்திரமாய் - ஒளி
முத்திரையாய்- உயர்
ரத்தினமாய்
பெண்ணினத்தின் - பேர்
அழகியென - இப்
பூவுலகின் - பூந்
தேவியென
முப்பொழுதும் - ஏன்
எப்பொழுதும் - ஒரு
சொப்பனமாய் - உள்
நிற்பவளை
கண்ணெதிரே - நான்
கண்டேனே - அவள்
பேரழகை - இனிப்
பாடுகிறேன்
(அழகு...)
சுந்தரத் தெலுங்கவள் தாய்மொழி யாம்தினம்
செந்தமிழ் பேசிச் சிரித்திடு வாள்அவள்
மந்திர விழியால் சிந்தும் பார்வைச்
சிந்தையைக் கெடுக்கும்; கனவிலும் அவள்முகம்
வந்தெனை மயக்கும்; காற்றில் பட்டக்
கந்தக மாய்என் நெஞ்சம் எரியும்
மந்திர விழிகளைக் கண்டுவிட்டால்; அவளோ
சந்தனப் பூமண நந்தவன மாய்என்
அந்தரங்க ஆசையில் நிறைந்து விட்டாள்
அந்திநேரக் கனவுகளில் கலந்து விட்டாள்
துள்ளிவரும் காலழகைக் கையிரண்டில் ஏந்திதினம்
அள்ளிவிளை யாடியொரு காவியம் - கள்ளியவள்
பொன்சிரிப்பைப் பார்த்துதினம் நான்படிக்கக் கூப்பிடுமே
மன்மதன் தன்பூ வனம்
பின்னிவைத்தக் கூந்தலிலே சேராமல்
சிரித்திருக்கும் சிறுமுடிகள்
கன்னியவள் காதருகில் மின்னுவது
தானென்றும் பேரழகு
பொன்சிரிப்புப் பூவிதழில் செம்பருத்திப்
பூஞ்சிவப்புக் கண்டவுடன்
என்நெஞ்சின் தாழ்திறக்கும்; கன்னியவள்
அருகினிலே தானழைக்கும்
நடனங்களின் அழகு குறைந்து விடவே
நடப்பாள் அவளும் பூமியின் மேலே
நடையின் அழகைக் காண்பதற்கென்றே
தொடர்ந்தேன் அவளை தினமும் பின்னே
ஒளியலைகள் பாராத அண்டத்தின்
வெளியினிலே சூழ்ந்த இருளெடுத்து
வெண்ணிலவின் வெள்ளொளியில் தொட்டெடுத்து
மின்னுகிற பேரழகாய்க் கார்குழலை
என்னதவம் செய்திறைவன் செய்தானோ
என்னவளின் எழில்கூடத் தந்தானோ
(தெளிவு...)
காத்திருந்து காத்திருந்து கன்னிமகள் வருவதைப்
பார்த்துவிட்டால் ஏனோ படபடக்கும் நெஞ்சமெலாம் - தினம்
பூத்திருக்கும் செந்நிறத்துப் பூவையெல்லாம் தேனிலிட்டுச்
சேர்த்தெடுத்த அழகதனைக் கன்னமெனக் கொண்டவளாம் - அவள்
நேத்திரத்தின் அசைவுகளில் நெஞ்சும் அசைந்தாடும்
பார்த்திருந்தால் வேறுதிசை பார்க்கவும் மறந்துவிடும்
முப்போதும் அவளழகில் மயங்கிநின்ற மன்னனிவன்
இப்படியே அவளழகை இடைவிடாது பாடிடலாம் - ஆனால்
வனப்பாலே மட்டுந்தான் பேரழகி அன்னவள்
குணத்தாலே எப்படியோ கண்டதில்லை ஒருபோதும்
கனவுநங்கைப் போலிருந்தாள் கனவுகளில் வலம்வந்தாள்
நினைவினிலும் சிலகாலம் நின்றிருந்தாள் கோதைமகள் - நானும்
இளமை கொண்டாடும் அவளழகில் மயங்கியே
சபலம் கொண்டேன் சலனம் கொண்டேன்
இனியும் அவளை நினைத்திருந் தால்என்
மனதில் அமைதி மறைந்து போகும்
பாதியில் வந்தவள் பாதியில் போனாள் - இனி
ஆதியில் எனக்கெனப் பிறந்தவள் எவளோ
அவள்வரும் நாள்வரைக் காத்திருக்கும் இதயம்
அவள்வந்த பின்னால் நாளும் பூத்திருக்கும்
- இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
இராஜகுரு,
கவிதை,
பெண்ணழகே பேரழகு,
மரபுக் கவிதை
Subscribe to:
Posts (Atom)


