26 டிசம்பர் 2004. சுனாமி தமிழகத்தையும் தாக்கிய நாள். அதற்கு அடுத்த சில நாட்களில் வெளிவந்த பல பத்திரிகை இதழ்களிலும் சுனாமி குறித்து புதுக்கவிதைகள். முக்கிய பக்கங்களில் வெளிவந்த கவிதைகளை எழுதியவர்கள் எல்லோரும் அன்றும் இன்றும் திரைப்பட பாடலாசிரியர்களாகவும் தமிழக அரசியலில் பெரும் புள்ளிகளாகவும் கொடிகட்டிப் பறப்பவர்கள்.
அத்தனை பெரும் தத்தம் கவிதைகளில், சுனாமி ஏற்பட்டதற்கு கடலே காரணமென்று கடலைக் குற்றவாளியாக்கி எண்ணற்றப் பழிகளைக் கடல்மேல் சுமத்தியிருந்தனர்.
பள்ளிக்கூடம் முடிந்தவுடன் எத்தனையோ நாட்கள் நானும் என் நண்பனும் விளையாடச் சென்ற இடம் கடற்கரை. எங்களை தினம்தினம் வரச்சொல்லி அழைத்தது கடல்.
அத்தகைய கடலைச் சாடி எத்தனைக் கவிதைகள்!
"நெஞ்சு பொறுக்க விலையே - அந்த
மதிகெட்ட கவிதைகளைப் படித்ததிலே"
அதன்பின், கடல் குற்றமற்றது என்பதை காட்டுவதற்காகவே நானும் எழுதினேன் ஒரு கவிதை. அவர்கள் எழுதிய அதே புதுக்கவிதை நடையில்.
சமீபத்தில், நண்பர் அகரம் அமுதா அவர்களின் வலைப்பதிவிலும் அதேபோல் சுனாமி குறித்து கடலைச் சாடிய கவிதை ஒன்று படித்தேன். என் எண்ணத்தை அவரிடம் தெரிவித்தேன். "உன் கவிதையை வெளியிடு. தவறில்லை" என்றார். அவர் அனுமதியுடன், இதோ அந்தக் கவிதை...
சுனாமி குறித்து கவிதை எழுதிய
கவிஞர்களுக்கு ஒரு கடிதம்
எதுகை மோனை கைவசம் இருப்பதால்
எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாமா?
உப்பிட்டவரை மறப்பதே பாவம் - நீங்களோ
உப்பளித்த கடலை மிதித்தே விட்டீர்களே
கடலுக்கா உயிர்களைப் பறிக்கும் ஆசை?
ஐயோ! இன்று நீங்களல்லவா
கடலைக் கொலை செய்யத் துடிக்கிறீர்கள்
அழகிய நிறமல்லவா நீலம் - அதை
நஞ்சென்று சொல்வதா உங்கள் எண்ணம்?
கடல் என்ற சொல் கூட 'அழகு' தானே - அதை
எப்படி உங்களால் 'அழுக்'காக்க முடிந்தது
ஆழிப் பேரலையால்
ஆயிரம் உயிர்கள் சாகும் என்று
கடலுக்கு எப்படித் தெரியும்
சுனாமி வந்தது உண்மைதான் - அனால்
சாகடிப்பது அதன் நோக்கமில்லையே
கடல் என்ன தானாகவா கொந்தளித்தது?
நில நடுக்கத்தால் தானே கொந்தளித்தது
இது காலத்தின் செயல்
என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
காலத்தை உங்களால் ஏச முடியுமா?
இளமைக்குப் பின் முதுமை வருவதால்
முதுமையை ஏசுபவர் உண்டோ?
காலத்தின் மாற்றத்திற்கு
கடலும் கட்டுப்பட்டதுதான்
காலத்தின் மாற்றத்தால் கொந்தளித்த கடலை
குற்றம் சொல்வது கவிஞனுக்கு அழகில்லை
காலத்தையும் - அதன்
மாற்றத்தையும் - கற்பனையால்
ஏற்றிச் சொல்லி - அதைப்
போற்றுபவன் அல்லவா கவிஞன்
கடல் இல்லையேல் மேகம் திரளுமா?
மேகம் இல்லையேல் மழை பொழியுமா?
மழை இல்லையேல் மண் விளையுமா?
விளைச்சல் இல்லையேல் உணவு கிடைக்குமா?
உணவு இல்லையேல் உயிர்கள் பிழைக்குமா?
கடலைச் சாடும் கவிகளே
கடலின்றி உங்களால் இருக்க முடியுமா?
வலை வீசிக் கடலின் மீன்களைப் பிடிக்கும்
மனிதனைப் போற்றும் நீங்கள்
ஒரே ஒரு நாள்
அலை வீசி மனிதனைப் பிடித்ததால்
கடலை ஏசுவது சரியோ?
கடலைச் சாடியது போதாதென்று - சிலர்
நிலத்தின் மீதும் பழிசுமத்தி விட்டீர்கள்
நிலம் ஏன் நடுங்கியது
என்பதை சிந்தித்தீர்களா?
மரங்களைச் சாய்த்தோம் - மண்ணின்
வளங்களை மாய்த்தோம்
நிலத்தைக் குடைந்தோம் -அதன்
நீரை உறிஞ்சினோம்
முடிந்தவரை தோண்டினோம் - மண்
கொண்டதை எல்லாம் பிடுங்கினோம்
நிலம் கொடுத்ததைக் காட்டிலும்
நாம் எடுத்ததே அதிகம்
நெஞ்சு குளிர எடுத்துக் கொண்டு - வெறும்
நஞ்சைத்தானே மண்ணிற் களித்தோம்
இன்னும் என்ன செய்வோமோ என்ற
பயத்தால்தானே நிலம் நடுங்கியது
அதனால்தானே கடல் பொங்கியது
நிலம் நடுங்கியதற்கும்
கடல் பொங்கியதற்கும்
காரணம் காலம்
காலம் செய்த குற்றத்திற்கு
கடலைச் சாடுவது சரியோ கவிகளே?
எனக்கும் எழுதத் தெரியும் என்பதற்காகவோ
உங்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவோ
நான் எழுதவில்லை
உங்களைப் பிறர் ஏற்க வேண்டும்
என்பதற்காகவே எழுதுகிறேன்
உயிர் எவர்க்கும் சொந்தமல்ல
அதைக் கொடுப்பதும் எடுப்பதும்
காலத்தின் கையில்
நன்றி.
-இராஜகுரு
(04 / ஜனவரி / 2005)
Tuesday, June 16, 2009
Monday, June 15, 2009
அன்பு
பெற்றெடுத்த பிள்ளை பிறப்பளித்த அன்னையென
சுற்றிநிற்கும் சுற்றத்தார் யாவர்க்கும் - மற்றிவ்
வுலகினில் வாழும் உயிர்களனைத் திற்கும்
நலனே நினைப்பதாம் அன்பு
பொன்னாலே ஆலயமொன் றமைத்தாலும்
பூவாலே பூஜைகள் செய்தாலும்
எந்நாளும் இறையோனை நினைப்பதுவாய்
பன்னாட்கள் விரதம்மேற் கொண்டாலும்
பெண்மீதும் மண்மீதும் பொன்மீதும்
கொண்டஆசை அத்தனையும் கொன்றாலும்
அன்புள்ளம் இல்லாத பேரானால்
இறையோனைச் சரண்புகுதல் இயலாதே
மண்ணோடு புரளும்புழு வானாலும்
விடங்கொண்டு தீண்டும்பாம் பானாலும்
எண்ணிடையே எல்லாம்ஓர் உயிரென்னும்
உண்மையினை உள்நிறுத்தி யார்மாட்டும்
அன்புடையார் எல்லோரும் மேலோர்இங்(கு)
அஃதில்லா தார்யாருங் கீழோர்மெய்
அன்புடையார்க் கேஇறைவன் அருளுண்டாம்
அன்பில்லா தார்க்கென்றும் வேதனையே
சொல்லாலே விளங்காதே அன்பிங்கே
சொற்களினால் விளக்குதலும் இயலாதே
பல்லோரும் வணங்குகின்ற இறையோனைச்
சில்லோரே தாரணியில் உணர்வதுபோல்
நல்லோராய் வாழ்வாரே யானாலும்
சில்லோரே அன்புதனை உனர்ந்திடுவார்
எல்லாமாய் விளங்குகின்ற இறையோனை
உணர்விக்கும் நெறியென்றால் அன்பொன்றே
இன்பத்தின் பொருளறியார் அன்பிலாதார்
எஞ்ஞான்றும் பிறர்மகிழ அன்பளித்தே
இன்புறுவார் நெஞ்சத்தால் அன்புடையார்
தாரணியின் அன்பொன்றே சிவமென்றார்
முன்னோரும் சொன்னதுவே இன்னார்க்கும்
அன்புடையா ரானவர்கட்(கு) உண்டெனினும்
துன்பெல்லாம் துரும்பாகும் அன்புடையார்
மன்னுலகும் கண்டவராம் மண்ணகத்தே
- இராஜகுரு
சுற்றிநிற்கும் சுற்றத்தார் யாவர்க்கும் - மற்றிவ்
வுலகினில் வாழும் உயிர்களனைத் திற்கும்
நலனே நினைப்பதாம் அன்பு
பொன்னாலே ஆலயமொன் றமைத்தாலும்
பூவாலே பூஜைகள் செய்தாலும்
எந்நாளும் இறையோனை நினைப்பதுவாய்
பன்னாட்கள் விரதம்மேற் கொண்டாலும்
பெண்மீதும் மண்மீதும் பொன்மீதும்
கொண்டஆசை அத்தனையும் கொன்றாலும்
அன்புள்ளம் இல்லாத பேரானால்
இறையோனைச் சரண்புகுதல் இயலாதே
மண்ணோடு புரளும்புழு வானாலும்
விடங்கொண்டு தீண்டும்பாம் பானாலும்
எண்ணிடையே எல்லாம்ஓர் உயிரென்னும்
உண்மையினை உள்நிறுத்தி யார்மாட்டும்
அன்புடையார் எல்லோரும் மேலோர்இங்(கு)
அஃதில்லா தார்யாருங் கீழோர்மெய்
அன்புடையார்க் கேஇறைவன் அருளுண்டாம்
அன்பில்லா தார்க்கென்றும் வேதனையே
சொல்லாலே விளங்காதே அன்பிங்கே
சொற்களினால் விளக்குதலும் இயலாதே
பல்லோரும் வணங்குகின்ற இறையோனைச்
சில்லோரே தாரணியில் உணர்வதுபோல்
நல்லோராய் வாழ்வாரே யானாலும்
சில்லோரே அன்புதனை உனர்ந்திடுவார்
எல்லாமாய் விளங்குகின்ற இறையோனை
உணர்விக்கும் நெறியென்றால் அன்பொன்றே
இன்பத்தின் பொருளறியார் அன்பிலாதார்
எஞ்ஞான்றும் பிறர்மகிழ அன்பளித்தே
இன்புறுவார் நெஞ்சத்தால் அன்புடையார்
தாரணியின் அன்பொன்றே சிவமென்றார்
முன்னோரும் சொன்னதுவே இன்னார்க்கும்
அன்புடையா ரானவர்கட்(கு) உண்டெனினும்
துன்பெல்லாம் துரும்பாகும் அன்புடையார்
மன்னுலகும் கண்டவராம் மண்ணகத்தே
- இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
அனுபவம்,
அன்பு,
இராஜகுரு,
கவிதை,
மரபுக் கவிதை
Monday, January 26, 2009
புகழ்ச்சி
"பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொன்னுக்கும் மயங்காதவர்கள் கூட புகழுக்கு மயங்குவதுண்டு. புகழ்ச்சியும் பாராட்டுமே ஒருவன் தன் செயல்களில் மேலும் வெற்றி பெறுவதற்கான ஊக்குவிப்பாக அமையக்கூடும். ஆனால் மிகுந்த புகழ்ச்சி ஒருவனின் கர்வத்தை அதிகப்படுத்தி அவனது வீழ்ச்சிக்கே காரணமாகவும் அமையக்கூடும்.
இந்த சூட்சுமம் தெரிந்த சிலர் தங்கள் காரியத்தை மற்றவர்களை புகழ்ந்தே சாதித்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் மிகுந்த புகழ்ச்சிக்கு மயங்காது நிலையாக இருக்கிறார்கள்.
அதுபோன்ற புகழ்ச்சிக்கு நானும் ஒருமுறை ஆளான போதுதான் இந்தக் கவிதையை எழுதினேன்".
கொண்டநற் றிறனைக் காட்டிய பின்னே
கண்டவர் அனைவரும் புகழ்கிறார் இங்கேவேண்டாம் இந்தப் பெரும்புகழ் என்னை
வீணென் றாக்கும் ஆணவம் பற்றும்
சான்றோர் தம்மைக் கண்டால் என்னுள்
தோன்றும் அடக்கம் தொலைந்தே போகும்
சிறிதாய் இங்கோர் வீழ்ச்சிவந் தாலும்
பெரிதாய்த் தோன்றும் காண்பவர்க் கிங்கே
இகத்தை ஆளுந் திறமிருந் தாலும்
புகழ்வ திங்கே யிருக்கட்டும் அளவாய்
-இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
இராஜகுரு,
கவிதை,
புகழ்ச்சி,
மரபுக் கவிதை
Thursday, January 1, 2009
புத்தாண்டுப் பொன்வானம்
வாசகர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்.
"நேற்றைய இரவு (31.12.2008). புத்தாண்டை வரவேற்க அத்தனை விழிகளும் ஆவலாய் விழித்துக் கொண்டிருந்த இரவு.
மற்ற இரவுகளுடன் சற்றே முரண்படும் இரவு.
புத்தாண்டு தொடங்கி அரை நிமிடம் வரை மட்டும் அந்த இரவு வானில் வண்ண மணிச்சிதறல்களாய் எத்தனை வான வேடிக்கைகள்.
வண்ணங்கள் சிதறும் வன்ன வானம்.
அந்த வன்ன வானுக்கு ஒரு சின்னக் கவிதை".
ஒளித்துளிகள் சிதறுவதால் வானிலிந்த வண்ணமென்றார் - அதில்
பனித்துளியின் சிதறல்களோ மின்னுமிந்த விண்மீன்கள்
ஒளித்துளிகள் தான்சிந்தி மின்னும்விண் மீன்களொடே - வண்ண
மணிச்சிதறல் போலழகு பொழியும்வான் வேடிக்கை
தனித்தனியாய் சிதறுகின்ற எழிற்றுளிகள் சேர்ந்ததனால் - இங்கே
தனிச்சிதறா அழகெடுத்தப் புத்தாண்டுப் பொன்வானம்.
- இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
இரவு வானம்,
இராஜகுரு,
கவிதை,
புத்தாண்டுப் பொன்வானம்,
மணிச்சிதறல்,
மரபுக் கவிதை,
வானம்
Sunday, October 26, 2008
சிறகுகள் விரிக்கும் ஆசை
"பறவைகள் பறப்பதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அது ஒரு பெரும் அதிசயமாகவே தோன்றும். ஒரு பறவை தன் சிறகுகளை அசைத்தும் வானில் ஏறி எந்தப் பிடிப்பும் இல்லாமல் காற்றில் செல்வதும், பின் அசைவுகளின்றி மிதந்து செல்வதும், பறந்து செல்வதும் என் மனதில் புதுப்புது உணர்வுகளை உண்டாக்கும்.
பறவைகளும் பறவைகள் பறக்கும் அழகும் மிகவும் பிடித்துவிட்டதால் எனக்கும் பறக்க வேண்டும் என்றொரு ஆசை.
அந்த ஆசையின் பிரதிபலிப்பே இந்தக் கவிதை..."
அந்த ஆசையின் பிரதிபலிப்பே இந்தக் கவிதை..."
செந்நிலவு தோன்றுமொரு செவ்வந்தி வேளையிலே
வண்ணமுறு பூப்பூக்கும் வாசமிகு சோலைதனில்
வண்டாடும் பூக்களைநான் ரசித்திருந்தேன்; அந்நேரம்
கொண்டாடிச் சிறகடித்து வந்ததொரு சிறுபறவை
வண்ணச் சிறகடித்து வெள்ளிவான வீதியில்
சின்னஞ் சிறுபறவை சின்னதொரு வட்டமிட்டு
என்னை நெருங்கிவந்தென் அருகில் அமர்ந்ததுகாண்
மின்னும் விழிகளினால் என்னைப் பார்த்ததுகாண்
செம்மண்ணில் தனைபுதைத்து சீர்கூட்டுஞ் சோலைவிட்டு
செவ்வானில் தனைபுதைக்கச் சென்றதந்த சிறுபறவை
அவ்வானில் அதுபறந்த அழகுதனைக் கண்டதனால்
என்வானம் போல்நெஞ்சில் எழுந்ததொரு ஆசையம்மா
நான்கண்ட சிறுபறவை மீண்டும்வர வேண்டும்
பறவையோடு நீங்காத நட்புகொள்ள வேண்டும்
பொன்மாயச் சிறகிரண்டு எனக்கென்று தந்து
பறப்பதற்கும் அப்பறவை பயிற்சிதர வேண்டும்
கிளைவிட்ட நெடுமரங்கள் தனில்சிக்கிக் கொண்டும்
சற்றுயரப் பறந்தேஎன் தோல்தேய வீழ்ந்தும்
பறவைதரும் பயிற்சியிலே சிலநாட்கள் கழியும்
பின்தொடங்கும் பொன்வானில் தனியாய்என் பயணம்
வன்னநிலா வீசிவரும் வான்சிவக்கும் நேரம்
என்மாயச் சிறகுகளை நான்விரிக்க வேண்டும்
செல்லாத இடமெல்லாம் சென்றுவர வேண்டும்
சொல்லாத உணர்வுகளும் என்னுள்ளே தோன்றும்
அலைகடலின் மேல்பறந்து விளையாடிக் கொண்டும்
கலைகின்ற மேகத்தின் உட்புகுந்து சென்றும்
மலையழகும் நதியழகும் நான்காண வேண்டும்
கலையழகு தோன்றவதைக் கவிபாட வேண்டும்
வேனிற் கால வெயிலில் ஒருநாள்
மேகம் திரண்டு பொழிய வேண்டும் - அந்த
மழையில் என்றன் சிறகுகள் நனைய
பாடிக் கொண்டு பறக்க வேண்டும்
ஆசையம்மா ஆசை - இது
சிறகுகள் விரிக்கும் ஆசை
காற்றைக் கிழித்துக் கொண்டு - வானில்
பறந்துச் செல்லும் ஆசை
ஆயிரம் ஆசைகள் அவரவர்க்(கு) உண்டு - என்
பறக்கும் ஆசை அதிலே ஒன்று
சிறகுகள் இரண்டு விரித்துக் கொண்டு - நான்
வானம் தொட்டுப் பறப்ப தென்று?
சின்னப் பறவைகள் பாடும் போதும்
வண்ணப் பறவைகள் பறக்கும் போதும்
எண்ணச் சிறகுகள் ஆயிரம் விரித்தே
என்னுள் புதுப்புது உணர்வுகள் தோன்றும்
வண்ணப் பறவையாய் சிறகுகள் விரித்து
வானில் பறப்ப தியலா தெனினும்
எண்ணச் சிறகுகள் விரிப்பேன்; என்றன்
கற்பனை வானில் பறந்து திரிவேன்
-இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
ஆசை,
இராஜகுரு,
கவிதை,
சிறகுகள் விரிக்கும் ஆசை,
மரபுக் கவிதை
Sunday, August 31, 2008
பூச்சூடினாள் பூவை
அந்தியிலே பூத்தமலர் அப்பொழுதே கொய்ததெண்ணி
நொந்து நொந்து நெஞ்சமெலாம் நோக - வண்ணப்
பூச்சரமாய் மாறியதில் பயனுண்டா என்றுசொல்லிக்
கூச்சலிட முடியாமல் பூக்கடையில் வாட
அந்த வேளையிலே வந்து நின்ற
நங்கையவள் பட்டுவிரல் பட்டவுடன் மொட்டுமலர்
தங்கமென ஜொலித்ததென்ன சொல்ல; அடடா
கன்னியவள் பூச்சூடும் அழகதனைக் கண்டால்தான்
அந்தநாள் இனியநாள் கும்; அன்னவள்
மொய்குழலில் சூடுகின்ற மலர்கொண்ட வாசத்தில்
மெய்மறந் திருந்தால்தான் வாழ்வில்சுகம் சேரும்.
- இராஜகுரு
நொந்து நொந்து நெஞ்சமெலாம் நோக - வண்ணப்
பூச்சரமாய் மாறியதில் பயனுண்டா என்றுசொல்லிக்
கூச்சலிட முடியாமல் பூக்கடையில் வாட
அந்த வேளையிலே வந்து நின்ற
நங்கையவள் பட்டுவிரல் பட்டவுடன் மொட்டுமலர்
தங்கமென ஜொலித்ததென்ன சொல்ல; அடடா
கன்னியவள் பூச்சூடும் அழகதனைக் கண்டால்தான்
அந்தநாள் இனியநாள் கும்; அன்னவள்
மொய்குழலில் சூடுகின்ற மலர்கொண்ட வாசத்தில்
மெய்மறந் திருந்தால்தான் வாழ்வில்சுகம் சேரும்.
- இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
இராஜகுரு,
கவிதை,
பெண்ணழகே பேரழகு,
மரபுக் கவிதை
நாளிரண்டு ஆகியதே
வான்வெளியில் பூத்திருக்கும் வாசமலர்ச் சோலையதில்
நான்பறந்து திரிவதுபோல் நாளும்ஒரு கனவுவர
தேன்கொண்ட சுவைகொண்ட தேமதுர குரல்கொண்ட
நான்கண்ட நங்கையவள் நெஞ்சினிக்கப் பேசிடுவாள்
பூமலரும் பாவைமுகம் பார்த்துவிட்டால் இதயத்தில்
பாமலரும் பருவமகள் பார்வைகளாள் பூமியிலே
தேன்மலரும் கான்மலரும் ஏன்மலரும் ஊன்சிவந்த
வான்மலராய் வந்தவள்என் மடிசாய்ந்து சிரித்திருக்க
பேரழகு கொண்டவளை பக்கத்தில் கொண்டவரை
நூறுநூறு பாடல்கள் நொடிகளிலே பாடியவன்
சோகத்தில் வாடுகிறேன் சொல்லேதும் சொல்லாமல்
ஏகத்தில் எனைவிட்டு எங்குசென்றாள் என்பைங்கிளி
தங்கமகன் எனையிங்குத் தனிமையிலே தவிக்கவிட்டு
சிங்காரச் சீரழகி சுகம்இழந்து போனாளோ
ஊர்விட்டுப் போனாளோ தவிக்கின்றேன் எனக்கிங்கு
யார்வந்துச் சொல்வார்கள் என்னவளின் நிலையெதுவோ?
நாளிரண்டு ஆகியதே நங்கையவள் முகம்கண்டு
வாளிரண்டு பட்டதுபோல் வலிக்கின்ற(து) என்நெஞ்சம்
தோளிரண்டும் நான்சாயத் தானென்றுச் சொன்னாளே
நாளெல்லாம் என்நெஞ்சை நோகவிட்டுச் சென்றாளே
அடடா...
ஏன்வருந்த வேண்டும்நான் எனைமறக்க வில்லையவள்
ஏன்புலம்பு கின்றேன்எனில் என்னருகில் இல்லையவள்
ஒருபோதும் என்நினைவை மறந்தவளும் இல்லையவள்
விரைந்தேதான் வருவாளே நான்பாடும் தேவியவள்.
- இராஜகுரு
நான்பறந்து திரிவதுபோல் நாளும்ஒரு கனவுவர
தேன்கொண்ட சுவைகொண்ட தேமதுர குரல்கொண்ட
நான்கண்ட நங்கையவள் நெஞ்சினிக்கப் பேசிடுவாள்
பூமலரும் பாவைமுகம் பார்த்துவிட்டால் இதயத்தில்
பாமலரும் பருவமகள் பார்வைகளாள் பூமியிலே
தேன்மலரும் கான்மலரும் ஏன்மலரும் ஊன்சிவந்த
வான்மலராய் வந்தவள்என் மடிசாய்ந்து சிரித்திருக்க
பேரழகு கொண்டவளை பக்கத்தில் கொண்டவரை
நூறுநூறு பாடல்கள் நொடிகளிலே பாடியவன்
சோகத்தில் வாடுகிறேன் சொல்லேதும் சொல்லாமல்
ஏகத்தில் எனைவிட்டு எங்குசென்றாள் என்பைங்கிளி
தங்கமகன் எனையிங்குத் தனிமையிலே தவிக்கவிட்டு
சிங்காரச் சீரழகி சுகம்இழந்து போனாளோ
ஊர்விட்டுப் போனாளோ தவிக்கின்றேன் எனக்கிங்கு
யார்வந்துச் சொல்வார்கள் என்னவளின் நிலையெதுவோ?
நாளிரண்டு ஆகியதே நங்கையவள் முகம்கண்டு
வாளிரண்டு பட்டதுபோல் வலிக்கின்ற(து) என்நெஞ்சம்
தோளிரண்டும் நான்சாயத் தானென்றுச் சொன்னாளே
நாளெல்லாம் என்நெஞ்சை நோகவிட்டுச் சென்றாளே
அடடா...
ஏன்வருந்த வேண்டும்நான் எனைமறக்க வில்லையவள்
ஏன்புலம்பு கின்றேன்எனில் என்னருகில் இல்லையவள்
ஒருபோதும் என்நினைவை மறந்தவளும் இல்லையவள்
விரைந்தேதான் வருவாளே நான்பாடும் தேவியவள்.
- இராஜகுரு
Labels:
Raajaguru,
raajaguru7887,
இராஜகுரு,
கவிதை,
பெண்ணழகே பேரழகு,
மரபுக் கவிதை
Subscribe to:
Posts (Atom)
